கரூர், ஜன. 7: வாடிய நெற்பயிருடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் வாடிய நெற்பயிருடன் வந்து வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்ததில் தற்போது குலை நோய் தாக்குதலால் பயிர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். பயிர் பாதுகாப்பிற்கு காப்பீடு செய்துள்ளோம். பயிருக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர பரிந்துரைக்க வேண்டும்.