தர்மபுரி, டிச.30: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம் வட்டுவனஅள்ளி ஊராட்சியில் ஏரிமலை, கோட்டூர் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. கோட்டூர் மலை கிராமத்தில் 310 வாக்காளர்களும், ஏரிமலை கிராமத்தில் 300 வாக்காளர்களும் உள்ளனர். அருகிலுள்ள அலகட்டு மலை கிராமத்தில், 50 வாக்காளர்கள் உள்ளனர். அலகட்டு மலை கிராம மக்களுக்கு 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஏரிமலை மலைக்கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள மக்கள் ஏரிமலை கிராமத்துக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். ஏரிமலை, கோட்டூர் மலை ஆகிய இரண்டு மலைகிராமங்களுக்கும் சாலை வசதி இல்லை என்பதால், இங்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை, கழுதைகள் மீது ஏற்றி கட்டணம் செலுத்தித்தான் எடுத்து செல்லப்படுகிறது.