கரூர், டிச. 29: உள்ளாட்சி தேர்தலில் நன்றி கெட்ட அதிமுகவினருக்கு டெபாசிட் கூட கிடைக்க கூடாது என்று கடவூர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேசினார். கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் காணியாளம்பட்டியில் நேற்று இறுதிக்கட்ட பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கரூர் மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம் பேசியது:
1987க்கு முன் இந்திய மண்ணில் பிறக்காதவனுக்கு இந்திய குடியுரிமை இல்லை என்றால் அத்வானிக்கு குடியுரிமை ரத்தாகுமா? அத்வானி பிறந்த ஊர் பாகிஸ்தானில் உள்ளது. ஒருவேளை அத்வானி ஊர் பிரிந்து சென்ற பாகிஸ்தான் தானே என்றால் யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழன் லெமூரியா கண்டத்தில் பிறந்தவன் தானே. 1980ல் உலக தமிழ் மாநாடு செய்திப்பிரிவு சிறப்பு படம் அதைத் தானே வலியுறுத்தியது. அத்வானியை அனுமதிக்கும்போது ஈழத்தமிழனை அனுமதித்தால் என்ன? முதலமைச்சரும், அதிமுகவினரும் ஈழத் தமிழனுக்கு இங்கே எந்த குறையும் இல்லை என்கின்றனரே. ஈழத்தமிழன் இந்தியாவில் படிக்க முடியுமா? வாக்கு போட முடியுமா? ரேஷன் கார்டு பெற முடியுமா?