தர்மபுரி, டிச.27: இயற்கையை பாதுகாக்க கோரி, திருப்பத்தூரில் இருந்து கரூருக்கு சைக்கிள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட இளைஞர்கள் நேற்று தர்மபுரிக்கு வந்தனர். நம்வாழ்வார் நினைவு தினத்தையொட்டி, இயற்கை பாதுகாப்பு, நீர்நிலைகள் பாதுகாப்பு, தமிழகத்தில் பனைமரம் பாதுகாப்போம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பத்தூரில் இருந்து கரூருக்கு 4இளைஞர்கள், ஒரு பெண் உள்பட 5பேர் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இந்நிலையில் அந்த இளைஞர்கள் 5பேரும் நேற்று தர்மபுரிக்கு வந்தனர். அவர்களை தர்மபுரியில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் வரவேற்றனர். செல்லும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம் செய்தனர்.