நல்லம்பள்ளி அருகே கரும்பு தோட்டத்தில் திடீர் தீ விபத்து

தர்மபுரி, டிச.27: நல்லம்பள்ளி அருகே கரும்பு தோட்டத்தில் தீ பிடித்து கரும்பு எரிந்து நாசமானது. நல்லம்பள்ளி வட்டம் சிவாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரவீந்திரன். இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில், கரும்பு நடவு செய்துள்ளார். இந்த கரும்பு தற்போது நன்றாக வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை கரும்பு வயலின் ஒருபகுதியில் இருந்து புகை வந்தது. சற்று நேரத்தில் அப்பகுதியில் தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. அறுவடை நிலையை எட்டிய வயல் என்பதால், காய்ந்த சோகைகள் அதிக அளவில் இருந்தது.

இதையடுத்து, தீ வயல் முழுவதும் பரவுவதை தடுக்க அப்பகுதியில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தர்மபுரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தண்ணீரை பீச்சியடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் கால் ஏக்கர் பரப்பளவு கொண்ட கரும்பு பயிர்கள் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: