ஆரணி, டிச.19: ஆரணி ஒன்றியத்தில் போலி கையெழுத்திட்டதாக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுக்களை அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் 4 மாவட்ட கவுன்சிலர், 36 ஒன்றிய கவுன்சிலர்கள், 75 ஊராட்சி தலைவர்கள், 585 கிராம வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்கள் உள்ளது. இந்த பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி முடிவடைந்தது. அதன்படி, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 32 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 209 பேரும், ஊராட்சி தலைவருக்கு 422 பேரும், கிராம வார்டு உறுப்பினருக்கு 1,529 பேர் என மொத்தம் 2,192 பேர் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், ஆரணி ஒன்றியத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களில் சிலர் தங்களது வேட்புமனுவில் முன்மொழிந்ததாக போலி கையெழுத்து போட்டு மனுதாக்கல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, ஆரணி ஒன்றிய தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம் சில வேட்பாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது புகார் அளிக்கப்பட்ட ஒரு சில வேட்பாளர்களின் மனுக்களை அதிகாரிகள் நிராகரித்தனர்.