உள்ளாட்சி தேர்தலுக்கு 2வது நாளில் 72பேர் வேட்புமனு தாக்கல்

தர்மபுரி, டிச.11: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு 2வது நாளில் விறுவிறுப்பாக, 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சியும், 10 பேரூராட்சிகளும், ஊராட்சி ஒன்றியம் 10ம், கிராம ஊராட்சிகள் 251 உள்ளன. தர்மபுரி நகராட்சியில் 33 உறுப்பினர்களும், 10 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து, 18 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பதவியும், 10 ஊராட்சி ஒன்றியங்களில் 188 வார்டு உறுப்பினர்கள் பதவியும், 10 பேரூராட்சிகளில் 159 வார்டுகளுக்கும், 251 கிராம ஊராட்சி வார்டுகளில் இருந்து 2,343 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.  தர்மபுரி மாவட்டத்தில், வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல்நாளில் மொத்தம் 107 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 2வது நாளான நேற்று தர்மபுரி ஒன்றியத்திற்குட்பட்ட உங்கரானஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சையாக ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். நேற்று மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 4பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 5 பேரும், கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 63 பேரும் என 72 பேர் மனு தாக்கல் செய்தனர்.  இதன்படி நேற்று வரை  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 6 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 11 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 162 பேருமாக, இதுவரை 179 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: