மானூர், நவ. 28: மானூர் பெரியகுளம் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து விவசாய பணிகளும் தீவிரமடைந்துள்ளன. நெல்லை அருகே மானூரில் பெரியகுளம் உள்ளது. ராமநதி, கருப்பா நதி, அடவிநயினார் மற்றும் குண்டாறு அணைகளைவிட அதிக நீர் கொள்ளளவு கொண்டது, இந்த பெரியகுளம். குளத்தின் உயரம் 16 அடி, கரையின் நீளம் 6240 மீ, அதிகபட்ச நீர் கொள்ளளவு 185.77 மி,க அடியாக உள்ளது, குளத்தின் மொத்த பரப்பளவு - 4,070 மி.ச. மீட்டர். இந்த குளத்தில் 4 மடைகளும், 1 மறுகால் 30,80 மீட்டரும் உள்ளது. எட்டான்குளம், மானூர், மாவடி, மதவக்குறிச்சி ஆகிய 4 பஞ்சாயத்துகளின் நிலப்பரப்பில் பரவி மானூர் பெரியகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் மூலம் நஞ்சை, புஞ்சை மற்றும் வாட்ரேட் அடங்கிய 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுவதோடு 25 கிராமங்கள் நிலத்தடிநீர் மூலம் கிணற்று பாசனமும் பெறுகின்றன. குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் சிற்றாற்றில் வீரகேரளம்புதூரை அடுத்த தாயார்தோப்பில் அமைந்துள்ள மானூர் தடுப்பணையில் இருந்து சுமார் 32.50 கிமீ பயணம் செய்து மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வந்து சேருகிறது. நடப்பாண்டில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மானூர் பெரிய குளத்திற்கு ஓரளவு தண்ணீர் வருவதால், 25 சதவீதம் நிறைந்துள்ளது. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள், விவசாய பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர். நிலங்களை பண்படுத்தி நெல் நடவுப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் மழை தொடர்ந்து பெரியகுளம் நிரம்ப வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். மானூர் பெரியகுளம் நிரம்பும் வகையில், சிற்றாற்றில் இருந்து வரும் தண்ணீர் வீணாகாமல் இருக்க விவசாய சங்க நிர்வாகிகள் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.