தர்மபுரி, நவ.22: தர்மபுரி கலெக்டர் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தர்மபுரி பகுதிகளில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். கலெக்டர் அலுவலக வளாகம், சேலம் மெயின்ரோடு, அரசு மருத்துவகல்லூரி வளாகம், எதிர்புற சாலை மற்றும் ஜி.எம் திரையரங்கு ரோடு, நேதாஜி பை பாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்கள், தேநீர் விடுதிகள், பலகார கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், துரித உணவகங்கள், பழ விற்பனை நிலையங்கள், பெட்டிகடைகள் மற்றும் நடமாடும் உணவு கடைகள் உள்ளிட்டவற்றில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர், திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த ஆய்வில் காலாவதியான குளிர் பானங்கள், தரமற்று கலப்பட தேயிலை தூள், செயற்கை நிறமேற்றி பயன்படுத்திய உணவு (கார்ன்ப்ளவர்) கரைசல், பலமுறை உபயோகப்படுத்திய சமையல் எண்ணெய் 5 லிட்டர் என சுமார் ₹5000 மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை எதிரில் சில உணவகங்களில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்தனர். சுகாதாரத்தை மேற்கொள்ளாத 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி, 15 நாட்களுக்குள் சரி செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சதத்தில் உணவு பாதுகாப்பு உரிம சான்றிதழ்களை ரத்து செய்வதுடன், சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.