கடையம், நவ. 20: ஆழ்வார்குறிச்சி அருகே செங்கானூர் ரயில்வே சுரங்கப் பாதையில் கலெக்டர் ஷில்பா ஆய்வு மேற்கொண்டார். ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட செங்கானூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில், ரயில் தண்டவாளத்தை கடக்க சுரங்கப்பாதையை ரயில்வே துறை அமைத்துள்ளது. மழை காலங்களில் இந்த சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற மோட்டாரும் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் மழை நேரங்களில் சுரங்கப் பாதையில் மழைநீருடன் ஊற்றும் அதிகளவில் பெருக்கெடுப்பதால் மோட்டார் மூலம் முழுமையாக தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுரங்கப்பாதையை செங்கானூர் கிராம மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தண்ணீரில் இறங்கி செல்வதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் மாற்றுப் பாதை அமைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி சார்பில் மேலும் இரண்டு டீசல் மோட்டார்கள் அமைக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது. ஆனாலும் தண்ணீரை முழுமையாக வெளியேற்ற முடியாததால் பொதுமக்கள் ரயில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது சுரங்கப்பாதையை நேரில் பார்வையிட்ட ரயில்வே நிர்வாக அதிகாரிகள் மாற்றுப் பாதை அமைத்துத் தருவதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை மாற்றுப் பாதை அமைக்கப்படவில்லை.