கரூர், நவ. 19: கரூர் வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையை தரம் உயர்த்தி, அதிகளவு பொதுமக்கள் வந்து செல்ல தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சி வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து உழவர்சந்தை வளாகம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. உழவர்சந்தை ஆரம்பித்த காலத்தில் ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் வந்து சென்ற நிலையில் தற்போது அதிக ஆதரவு இன்றி வெறிச்சோடியே காணப்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. 2000ம் ஆண்டில் ஆரம்பித்த கரூர் உழவர்சந்தை இன்றைக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், வெங்கமேடு உழவர்சந்தையின் நிலைதான் குறிப்பிடும்படியாக இல்லை எனக் கூறப்படுகிறது. உழவர் சந்தை செயல்படும் பகுதிக்கு அருகிலேயே வாரச்சந்தை செயல்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்த சந்தைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி சென்று விடுவதால் உழவர் சந்தைக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், அதிகளவு வியாபாரிகள் வந்து செல்லும் அளவுக்கு பஸ் வசதியும், பஸ் போக்குவரத்தும் இல்லாத பகுதி என்பதாலும் சந்தையின் செயல்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.