தர்மபுரி, நவ.13: பென்னாகரம் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால், தாழ்வான இடங்களில் தேங்கி நிற்கும் நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருராட்சி 18 வார்டுகளை கொண்டது. இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சார்பதிவாளர் அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் பின்புறம், சந்தைத் தோப்பு உள்ளிட்ட பேரூராட்சியின் பல்வேறு பகுதியில் மழை நீர் தேங்கிய நிலையில் உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீர் நாளடைவில் பச்சை நிறமாக மாறி, துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.