கரூர், நவ. 12: நுண்ணீர் பாசன திட்டத்தின்கீழ் 794 எக்டேர் பரப்பளவில் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று கரூர் கலெக்டர் கூறினார்.கரூர் ஒன்றியம் ஓலப்பாளையம், நொய்யல், சேமங்கி, மூலிமங்கலம் பகுதிகளில் ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சிப் பணிகள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை பணிகளை கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் கூறுகையில்,கரூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் மூலம், சுழற்கலப்பை, டிராக்டர் உள்ளிட்ட வேளாண் கருவிகள் ரூ.62.13லட்சம் மதிப்பு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் 2019- 20ம் ஆண்டில் 95 டிராக்டர்கள் உள்பட ரூ.3.36 கோடி மதிப்பில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சூரியசக்தியில் இயங்கும் மின்மோட்டார் (சோலார் பம்பு) வழங்கும் திட்டத்தின்கீழ் 20117- 18ம் ஆண்டில் 25 மோட்டார்களுக்கு ரூ.94.19 லட்சம் மானியம், 20118- 19ம் ஆண்டில் 67 மோட்டார்கள் ரூ.2.61 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளன. நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 4500 எக்டேர் நிலத்தில் ரூ.23.34 கோடி மதிப்பில் நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்து இதுவரை 794 எக்டேர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.