தர்மபுரி, நவ.7: தர்மபுரி நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அமைப்பதில் தாமதமாகி வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 2012ம் ஆண்டு, நகரின் முக்கிய சந்திப்பான நான்குரோட்டில் தனியார் பங்களிப்புடன் ரவுண்டானாவை சீரமைத்து, போக்குவரத்தை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது. இதை தொடர்ந்து நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தனியார் நிறுவனங்கள் போதிய ஒத்துழைப்பு தராததால், அந்த திட்டம் பாதியிலேயே நின்றுவிட்டது. பெருகி வரும் வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப, தர்மபுரி போக்குவரத்து பிரிவில் போதிய போலீசார் இல்லை. இதனால் முக்கிய சந்திப்புகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.