தர்மபுரி, அக்.31: தொப்பூர் அருகே உம்மியம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில் மழலையர் வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், 40 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நல்லம்பள்ளி தொப்பூர் ஊராட்சி உம்மியம்பட்டியில், அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 235 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் நரசிம்மன் உள்ளிட்ட 9 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பள்ளியில் புதியதாக மழலையர் வகுப்பு (எல்கேஜி, யூகேஜி) தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமுதா, ஊர்கவுண்டர்கள் மாதையன், ராஜூ, ஊர் நாய்க்கர் பன்னீர்செல்வம், பள்ளி வளர்ச்சி ஆலோசகர்கள் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் அசோகன் மற்றும் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.