காரிமங்கலத்தில் சேறும், சகதியுமாக மாறிய மண்சாலை

காரிமங்கலம், அக்.25: காரிமங்கலம் அருகே முருங்கப்பட்டியில் மழையால் மண்சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். காரிமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு முருக்கம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்சாலை சேதமடைந்து, தற்போது மண் சாலையாக மாறிவிட்டது. இந்த சாலையை சீரமைக்க பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது காரிமங்கலம் பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையால், சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: