தோகைமலை, அக். 25: தோகைமலை அருகே புழுதேரி வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கான உரங்களின் சரியான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே புழுதேரியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் விவசாயிகளுக்கான உரங்களின் சரியான பயன்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பரமேஸ்குமார், தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி விஐயபாஸ்கரன், ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் தலைவர் பாலசுப்ரமணியம், வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஆத்மா திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு உரங்களின் சரியான பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஜல் சக்தி அபியான் திட்டம் குறித்து காட்சி அரங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் சுகாதார மேம்பாடுகள் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்தனர். தொடரந்து அசோலா, காய்கறி விதைகள், கிளைரிசிடியா கரணைகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குனர் ரெத்தினம், தொழில்நுட்ப வல்லுனர் தமிழ்செல்வி, வேளாண் அலுவலர் அர்ச்சுனன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் (ஆத்மா) பாலசுப்ரமணி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர்கள் உள்பட வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டு பல்வேறு தகவல்களை விவசாயிகளுக்கு அளித்தனர். இதில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 236 விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.