தர்மபுரி, அக்.23: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் மழையால் ராமன்நகர் தடுப்பணை 14 ஆண்டிற்கு பிறகு நிரம்பியதால். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உங்காரனஅள்ளி ஊராட்சி ராமன்நகரில், சனத்குமார் நதியின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணைக்கு வத்தல் மலையில் இருந்து இலக்கியம்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் ஆக்கிரப்பின் பிடியில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி நீர்நிலை கால்வாயை தூர்வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று விடிய விடிய மழை கொட்டியது. இதில், ராமன்நகர், நேருநகர், இபி காலனி மற்றும் அரசு கலைக்கல்லூரி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் மழைநீர் பெருக்கெடுத்தது. இதனால் ராமன்நகர் தடுப்பணை நிரம்பிய உபரிநீர் வெளியேறியது. உபரிநீர் இலக்கியம்பட்டி ஏரிக்கு செல்கிறது. இலக்கியம்பட்டி ஏரியும் நிரம்பும் நிலையில் உள்ளது. ராமன்நகர் தடுப்பணை 14 ஆண்டுக்கு பிறகு நிரம்பி, உபரிநீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், தண்ணீர் செல்லும் வழித்தடத்தில் உள்ள அழகாபுரி, வஉசி நகர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளா வருகின்றன.