தர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தென்மேற்கு பருவமழை 400 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு பிறகு சராசரியைவிட 39 மி.மீ. அதிகம் பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் ஏரி, குளம், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது. பயிர் சாகுபடி பரப்பும் வெகுவாக சரிந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்த தென்மேற்கு பருவமழை, ஓரளவு தர்மபுரி மாவட்டத்திற்கு கைகொடுத்துள்ளது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையின் சராசரி மழையளவு அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 853.01 மில்லி மீட்டர். இதுவரை 539 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் சராசரி அளவு 361 மிமீ. ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை, மொத்தம் 400 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வழக்கத்தை காட்டிலும் 39 மில்லி மீட்டர் கூடுதலாக பெய்துள்ளது. கடந்த 4 ஆண்டிற்கு பிறகு, தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது. இந்த மழையால் தூர்வாரப்பட்ட ஏரி, குளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.