தோகைமலை, அக்.17: தோகைமலை ஒன்றிய பகுதியில் தினகரன் செய்தி எதிரொலியாக சுகாதார பணிகள் மும்முரமாக நடைபெற்றது.கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த வாரம் மழை பெய்தது. அதனை தொடர்ந்து தற்போதும் அவ்வப்போது மழை பெய்து வருகின்றது. இதனால் பிளாஸ்டிக் கப், டயர், தேங்காய் ஓடுகள் என தேங்கிக்கிடக்கும் கழிவு பொருட்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் நிலையில் உள்ளது. தோகைமலை ஒன்றியத்தில் அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், ஆதி திராவிடர் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 85 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் ஒரு சில பள்ளிகளின் கட்டிடங்களுக்கு வெளிபுறங்களில் சுகாதாரம் இல்லாமல் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் சூழல் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் பகல் நேரங்களில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை கொசுக்கள் கடிக்கும் சூழல் உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் டெங்கு உட்பட பல்வேறு வைரஸ் காய்ச்சல்கள்; பரவ காரணமாகிறது.கடந்த 5ம் தேதி அன்று ஒரே நாளில் 2 குழந்தைகள் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்ததால் பெற்றோர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டுகளில் 100க்கும் அதிகமான மஸ்தூர் பணியாளர்களை கொண்டு அனைத்து கிராமங்களிலும் தேங்கி கிடக்கும் சாக்கடைகள், பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட தேவையற்ற நீர் நிலைகளை அழிப்பது, வீடுகளுக்குச் சென்று குடிநீர் தொட்டிகளை பரிசோதனை செய்து மருந்து தெளித்தல், கொசுமருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தனர். ஆனால் தற்போது இப்பணிகள் போதிய பணியாளர்கள் இல்லாமல் சரிவர நடப்பதில்லை என்று கூறுகின்றனர்.