கரூர், அக். 17: கரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என கலெக்டர் கூறினார்.கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும், டெங்கு தடுப்பு பிரிவில் உள் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனைக்கு வரும் மக்களக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில், நுழைவு வாயில் பகுதியில், மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் நபர்கள் கண்டிப்பாக கைகளை சுத்தமாக கழுவிய பிறகே செல்வதற்கு ஏற்ற வகையில் கை கழுவுவதற்கான இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையும், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கை கழுவி விட்டு சென்றதையும் கலெக்டர் பார்வையிட்டார்.மேலும், மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவதை பார்வையிட்ட கலெக்டர், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தானும் அருந்தினார். இதனைத் தொடர்ந்து, டெங்கு தடுப்பு பிரிவில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளிகளையும், பிற காரணங்களுக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்வையிட்ட கலெக்டர், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:கரூர் மாவட்டம் முழுதும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் என வரும் நபர்களுக்கு முழுமையாக தீவிர பரிசோதனைகள் செய்யப்பட்டு டெங்கு உள்ளதா? இல்லை சாதாரண காய்ச்சலா என்பது முதலில் உறுதி செய்யப்படுகிறது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாக கருதப்படும் பகுதிகள் சரி செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கும் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.