அருர், அக்.10: தர்மபுரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும், நுண்ணீர் பாசன திட்ட பணிகள் மற்றும் மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படும், துணை நீர் மேலாண்மை திட்ட பணிகள் குறித்து, மத்திய அரசின் துணை ஆணையர் ராவ் கள ஆய்வு மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்ட நீர்வடிப்பகுதி வளர்ச்சி முகமை சார்பில், துணை நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த படுகிறது. இத்திட்ட பணிகளை ஆய்வு செய்ய, மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் துணை ஆணையர் ராவ், தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். பின்னர், மொரப்பூர் வட்டாரம் நடுப்பட்டி கிராமத்தில், நுண்ணீர்ப் பாசன வயல்களையும் துணை நீர் மேலாண்மை திட்ட வயல்களையும், கள ஆய்வு செய்தார். மானியம் பெற்ற விவசாயிகளுடன், நுண்ணீர் பாசன திட்டத்தின் பயன்கள் குறித்தும், நுண்ணீர் பாசன முகவர்களின் சேவை குறித்தும் கலந்துரையாடினார்.