தர்மபுரி, அக்.10: தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண்மையில் உயர் விளைச்சலுக்கு தரமான விதை, அடிப்படையான, முதுகெலும்பு போன்றதாகும். தரமான விதைகளே, பயிரின் உற்பத்திறன், உயரிய மகசூல் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது. விதையின் தரத்தினை நிர்ணயிப்பதில், விதையின் முளைப்புத்திறனானது முதன்மைப் பங்கு வகிக்கிறது. முளைப்புத் திறனை முன்கூட்டியே அறிவதால், விதையின் அளவை முளைப்புத் திறனுக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கலாம். விவசாயிகள் தரமான விதைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விதை பரிசோதனை ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் காலம் மற்றும் பணம் விரயமில்லாமல், உரிய காலத்தில் தங்களிடமுள்ள விதைகளை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம். விதை பரிசோதனை நிலையம், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் இயங்கி வருகிறது.