தர்மபுரி, அக்.10: சித்தேரி ஊராட்சியில், 40 மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால், பஸ் போக்குவரத்து இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்தேரி ஊராட்சியில் சித்தேரி, பேரேரி புதூர், கொண்டம்பட்டி, சூரியக்கடை, சூளிக்குறி, தேக்கல்பட்டி, கலசப்பாடி, செங்காடு, மாம்பாறை, கருக்கம்பட்டி, ஆலமரத்துவளைவு, அழகூர், மோட்டுவளவு, குண்டல்மடுவு, எருமைக்காடு, நலமாங்கடை உள்ளிட்ட 62 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களில் 10,364 பேர் வசிக்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 3,600 அடி உயரத்தில் உள்ள சித்தேரி மலைக்கிராமத்தில், விவசாயம் மற்றும் தேன் சேகரித்தல் போன்ற தொழில் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், அன்டை மாநிலங்களுக்கு கூலிவேலை செய்ய பலர் சென்று விட்டனர். அரூரில் இருந்து சித்தேரி, சூரியக்கடை வரை 13, 25, 27 ஆகிய எண் கொண்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. விஷேச நாட்களில் இந்த பஸ்களும் முன்னறிவிப்பு இன்றி திடீரென நிறுத்தப்படுகிறது. இதனால், மலை கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.