கரூர், அக். 1: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இலவசமாக மனு எழுதிக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இலவச வீட்டு மனைபட்டா, விதவை, முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமான மனுக்களை அளித்து வருகின்றனர்.கிராமப்பகுதிகளில் இருந்து கோரிக்கை சம்பந்தமாக வரும் மக்களை குறி வைத்து, சிலர் மனு எழுதி தருவதற்கு ரூ. 100 முதல் 300 வரை வசூல் செய்து விடுகின்றனர். இதனால் பல்வேறு தரப்பினர்களும் கடுமையாக பாதித்து வந்தனர். இதனையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே இலவசமாக மனுக்கள் எழுதித் தர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.