தர்மபுரி, செப்.30: தர்மபுரி நகரில் மழைநீர் வடிவதற்காக அமைக்கப்படும் கால்வாய், பட்டா நிலம் வழியாக அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட ஏஎஸ்டிசி நகர், ஆவின் நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது. பென்னாகரம் மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கின் உள்ளேயும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள், தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். இந்நிலையில், பிடமனேரி ஏரி முழு கொள்ளளவை எட்டியதும், அங்கிருந்து வெளியேறிய மழைநீர் ஏஎஸ்டிசி நகர், நந்தி நகர் மற்றும் ஆவின் நகர் பகுதிகளில் உள்ள காலி வீட்டுமனைகளில் மீண்டும் தேங்கியது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து, பிடமனேரி ஏரியில் இருந்து வெளியேறும் நீரை வெளியேற்ற, தர்மபுரி வருவாய் துறை ஊழியர்கள் பிடமனேரி, பெருமாள் கோயில் பகுதி, ஆவின் நகர், ஏஎஸ்டிசி நகர், சத்யா நகர் வரை கால்வாய் அமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெருமாள் கோயில் பகுதியில், பட்டா நிலத்திற்கு சொந்தமானவர்கள், தங்களது நிலத்தில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கால்வாய் தோண்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.