தர்மபுரி, செப்.26: அம்மா விளையாட்டுக்குழுவில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இளைஞர்களின் ஆரோக்கியத்தையும், மன வளத்தையும் மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவித்து வெளிக்கொணரவும் நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக்குழு அமைக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வாலிபால், கபாடி, கால்பந்து அல்லது கிரிக்கெட் போட்டிகள் வட்டார அளவு, மாவட்ட அளவு மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளது.