தர்மபுரி, செப்.26: நல்லம்பள்ளி ஆதிதிராவிடர் காலனியில், மழையால் மண் சாலை சேறும், சகதியுமாக மாறியதால், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நல்லம்பள்ளி தாலுகா அலுவலகம் அருகே, ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இக்காலனியில் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 5க்கும் மேற்பட்ட தெருக்களில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை, தற்போது மண்சாலையாக மாறியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் இந்த தெருக்கள் சேறும், சகதியுமாக மாறி, ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், காலனிக்கு செல்லும் வழியில் கொட்டப்படும் குப்பை, உடனுக்குடன் அகற்றப்படாததால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.