கரூர், செப். 25: குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புதுக்குறுக்குப்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம்(26). காகித ஆலையில் கூலித்தொழிலாளராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம் உள்ள இவருக்கும் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சண்முகம், வீட்டில் யாருமில்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.மனைவி பல்லை உடைத்த கணவன் கைது: கரூர் வெங்கமேடு அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(40). பெயிண்டர். இவரின் மனைவி தனலட்சுமி(34). இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். குடும்பத்தகராறு காரணமாக தனலட்சுமி, மண்மங்கலத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியை பார்க்க சென்ற சுரேஷ்குமாருக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்தவர் மனைவியை அடித்து பல்லை உடைத்துள்ளார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனலட்சுமி அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.