கோவை, செப்.20:கோவையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் தேயிலை தூள் கிலோவுக்கு ரூ.3.7 அதிகரித்துள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வர்த்தக மையத்தில் வாரந்தோறும் தேயிலை ஏலம் நடைபெறுவது வழக்கம். இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏல தாரர்கள் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் தேயிலையை ஏலம் எடுத்து வருகின்றனர். அதன்படி, தேயிலை வர்த்தக மையத்தில் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு இரண்டு லட்சத்து 48 ஆயிரத்து 136 கிலோ தேயிலை தூள் ஏலத்திற்காக வந்தது. இதில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 868 கிலோ ஏலம் போனது. விற்பனைக்கு வந்த தேயிலை தூளில் இருந்து மொத்தம் 80 சதவீதம் ஏலம் போனது. இதில் 49 ஏலதாரர்கள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ தேயிலை தூள் 95 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ 91 ரூபாய் 32 காசுக்கு ஏலம் போனது.