தர்மபுரி, செப்.20: தர்மபுரி உழவர் சந்தை அருகே, பாழடைந்த அரசு அலுவலர்களின் குடியிருப்புகள் நேற்று பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது.தர்மபுரி நான்கு ரோடு உழவர்சந்தை அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் காலனி உள்ளது. கடந்த1959ம் ஆண்டு 83 சென்ட் நிலப்பரப்பில் 7 வீடுகள் கட்டப்பட்டது. மாவட்டம் பணியற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த குடியிருப்புகள் முறையாக பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து காணப்பட்டது. இதையடுத்து இந்த வீடுகளில் தங்கியிருந்த அதிகாரிகள் வெளியேறினர்.இதையடுத்து காலியாக இருந்த வீடுகளை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்தும், பழ குடோனாகவும் பயன்படுத்தி வந்தனர். மேலும், மாலை நேரங்களில் மது குடிக்கும் பாராகவும், இரவு நேரத்தில் குற்றச்செயல்கள் நடக்கும் இடமாக மாறியது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவின் பேரில் நேற்று தர்மபுரி தாசில்தார் சுகுமாரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதையன், ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறை, மின் ஊழியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் குடியிருப்பு பகுதிக்கு வந்தனர்.