அரூர், செப்.20: அரூர்-தர்மபுரி சாலையோரம் மேய்ச்சலுக்காக கட்டப்படும் கால்நடைகள், சாலையில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
அரூர்-ஊத்தங்கரை சாலை மற்றும் மருதிப்பட்டி-ஈச்சம்பாடி சாலையோரம், கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, எருமை ஆகிய கால்நடைகளை ஓட்டி வந்து மேய்ச்சலுக்காக கட்டுகின்றனர். இந்த கால்நடைகளை பல நேரம் சாலைகளின் நடுவே வந்து நின்று விடுகின்றன. இதனால் சாலைகளில் வரும் டூவீலர்கள், பஸ் மற்றும் சரக்கு லாரிகள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. டூவீலரில் வருபவர்கள் மாடு முட்டி கீழே விழந்து அடிபடுகின்றனர். சில சரக்கு வாகனங்கள் கால்நடைகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிடுகிறது. எனவே, கால்நடை வளர்ப்போர், நீளம் குறைவான கயிறுகள் மூலம், கால்நடைகள் சாலைக்கு வராதபடி மேய்ச்சலுக்கு கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.