கடத்தூர், செப்.20: கடத்தூர் பகுதியில் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், வெளிமாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்படும் வைக்கோல் கட்டு ஒன்றை ₹310க்கு விவசாயிகள் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், பாலக்கோடு, கடத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தர்மபுரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டதால், நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து கிணறுகளின் தண்ணீர் வற்றியது.வறட்சியால் பயிர்கள் மட்டுமின்றி தென்னை, பனை மரங்களும் காய்ந்த கருகிப்போனது. இதனால் கால்நடைகளுக்கு தீவனம், புல் போன்றவற்றின் தட்டுப்பாடு ஏற்பட்டது.