பாலக்கோடு, செப்.19: பாலக்கோடு அருகே கொய்யா பழம் லோடு ஏற்றிச்சென்ற பிக்கப் வேன் சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். படுகாயமடைந்த டிரைவர் உள்பட 2 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் இருந்து, வெள்ளிச்சந்தைக்கு கொய்யா பழம் ஏற்றிக்கொண்டு பிக்கப் வேன் ஒன்று சென்றது. இந்த வேனை உரிமையாளரும், டிரைவருமான முனியப்பன் மகன் பிரகாஷ்(22) ஓட்டிச்சென்றார். அவருடன் சங்கர் மகன் சூர்யா(20) உடன் சென்றுள்ளார். வண்டியின் பின்புறம் பிளாஸ்டிக் பெட்டிகளின் மேற்பகுதியில், கொலசஅள்ளியை சேர்ந்த முத்து மகன் முனிராஜ்(46) உட்கார்ந்து சென்றுள்ளார். இந்த வேன் நேற்று மாலை 6.30 மணியளவில் நாராயணன் கொட்டாய் என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.