பாலக்கோடு, செப்.19: மாரண்டஅள்ளி-பாலக்கோடு சாலையில் ரயில்வேகேட் அருகே 2 புளியமரங்கள் பட்டுப்போய் முறிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த 6 மாதங்களாக மழையின் போது சூறைக்காற்று வீசும் போது புளியமரத்தில் கிளைகள் முறிந்து சாலையில் விழுவது வாடிக்கையாக உள்ளது. ஓசூர் மற்றும் பெங்களூரு செல்லும் ரயிலில் பயணிக்க, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் இந்த சாலையில் வழியாக வந்து செல்கின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு புளியமரத்தின் பெரிய கிளை முறிந்து கீழே விழுந்தது. அப்போது சாலையில் சென்ற பள்ளிக் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இந்த பட்டுப்போன புளியமரங்களை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாரண்டஅள்ளி - பாலக்கோடு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.