தர்மபுரி, செப்.19: சீதோஷ்ணநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள சளி, காய்ச்சலை கட்டுப்படுத்த தர்மபுரி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தற்போது சீதோஷ்ணநிலை மாறியுள்ளது. காலையில் வெயில், மாலையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் சளி, காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தர்மபுரி அரசு மருத்துவமனை காய்ச்சல் பிரிவுக்கு தினசரி 150 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக சிலர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சளி மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில், தர்மபுரி அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவின் சார்பில் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது.