ஓட்டப்பிடாரம் செப்.19: தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டில் வசூலிக்கப்படும் வாகன நுழைவு கட்டணத்தை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 40 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தனியார் அமைப்புகள் மூலம் டோல்கேட் அமைப்பு வாகன நுழைவு கட்டணம் என்ற சுங்கவரி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி-மதுரை மெயின் ரோட்டில் புதூர் பாண்டியபுரம் அருகே தனியார் பராமரிப்பில் டோல்கேட் செயல்பட்டு வருகிறது. மெயின் ரோடு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் புதிதாக சாலை ஏதும் இதுவரை அமைக்கப்படவில்லை. மேலும் அந்த சாலையில் பராமரிப்பு பணிகள் கூட நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் அது தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள லாரி உரிமையாளர் சங்கத்தினர் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.