வடவல்லநாட்டில் புதிய கலையரங்கம்

செய்துங்கநல்லூர், டிச. 19: வடவல்லநாடு விளாத்திகுளத்தில் புதிய கலையரங்கத்தை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார். கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடவல்லநாடு ஊராட்சி விளாத்திகுளத்தில் கலையரங்கம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையேற்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கலையரங்கம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா கலந்து கொண்டு புதிய கலையரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.தொடர்ந்து இதே ஊராட்சியில் உள்ள சேதுராமலிங்கபுரத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுமான பணிக்கு சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் பொதுமக்களிடம் கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, ஆறுமுக நயினார், ஒன்றிய பொறியாளர் தளவாய், பணி மேற்பார்வையாளர் சிவக்குமார், ஊராட்சி செயலர் சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: