வீரபாண்டியன்பட்டினத்தில் குடியிருப்புகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை வெளியேற்ற கோரிக்கை

திருச்செந்தூர், டிச. 20: மழை நின்று இயல்பு நிலை திரும்பிய போதிலும் வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகர் கடைசி தெருவில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள நீர் வடியாததால் இப்பகுதி மக்கள் தொடர் அவதியடைந்து வருகின்றனர். தென் கடலோர மாவட்டங்களில் கடந்த 20 தினங்களுக்கும் முன்பு வரை தொடர் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை எங்கும் மழைநீர் ஆறாக ஓடியும், தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியும் கிடந்தது. தேங்கிய நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த நவ.30ம் தேதி முதல் மழை நின்றதையடுத்து இயல்பு நிலை திரும்பியது.

இதேபோல திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்துக்குட்பட்ட குறிஞ்சி நகர் கடைசி தெருவில் மழைநீர் இன்னும் வடியாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். தேங்கிய நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட போதிலும் இன்னமும் சில பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளை சூழ்ந்தே உள்ளது. தேங்கியுள்ள நீரினால் நோய் வரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கடந்த 2 தினங்களாக பெய்த மழையும் அங்கு தேங்கியுள்ளது. எனவே பஞ்சாயத்து நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மழைநீர் வெளியேறுவதற்கு வசதியாக வடிகால்களை சீரமைத்திடவும், தாழ்வான இடங்களில் கிடக்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: