கரூர், செப். 11: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இயங்கும் சிக்னலில் ஒரே மாதிரியான டைமிங் நிறுவப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. கரூரில் இருந்து திருச்சி, தாந்தோணிமலை, மணப்பாறை, தரகம்பட்டி, குளித்தலை போன்ற பகுதிகளுக்கும், இதே போல், திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கரூர், கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற பகுதிகளுக்கும் செல்லும் அனைத்து வாகனங்களும் லைட்ஹவுஸ் கார்னர் வழியாக சென்று வருகிறது.பேருந்துகள் மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்தும் இதன் வழியாக செல்கிறது. இதனால் இந்த பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.இந்நிலையில் மூன்று வழிகளில் டைம் செட்டிங் செய்யப்பட்டு சிக்னல் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டு இடங்களில் ஒரே அளவிலும், ஒரு பகுதியில் மட்டும் 103 நிமிடங்கள் என்ற அடிப்படையில் டைமிங் வைக்கப்பட்டு சிக்னல் செயல்பட்டு வருகிறது. இதனால் ஒரு பகுதியினர் மட்டும் போக்குவரத்து நெருக்கடி இல்லாத சமயத்திலும் நீண்ட நேரம் நின்று செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது.