கரூர், செப்.11: குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பியதால் பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவடியான் கோயில் தெருவில் கடந்த பல ஆண்டுகளாக 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருவதோடு சலவை தொழில், மீன்பிடித்தொழில் போன்ற தொழில்கள் செய்து வருகின்றனர். கடந்த 1993ம் ஆண்டு அமராவதி ஆற்றில் வெள்ளம் வந்த போது, பாதிப்பு பகுதிகளை பார்வையிட வந்த அதிகாரிகள், இந்த இடத்தில், குடியிருக்கும் அனைவருக்கும் நகராட்சியினர் பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து இந்த பகுதியினர் பட்டா கேட்டு முயற்சிகள் மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, நகராட்சி சார்பில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. அதிலும் குறிப்பிட்ட சில குடும்பத்தினருக்கு மட்டும் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.