தர்மபுரி, செப்.10: தர்மபுரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைப்போட்டி வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. இது குறித்து தர்மபுரி கலெக்டர் மலர்விழி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், மாவட்டக் கலைப் போட்டிகள் தர்மபுரி டவுன் அப்பாவு நகர் அரசு நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் இம்மாதம் வரும் 14ம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் நடைபெறுகிறது. 6ம் வகுப்பு முதல் பிளஸ்1 வரை படிக்கும் மாணவ மாணவிகள் பங்கு பெறலாம். 6 முதல் 8ம் வகுப்பு வரை ஜுனியர் பிரிவாகவும் 9 முதல் 11 வரை சீனியர் பிரிவாகவும் போட்டிகள் நடைபெறும். காலை 10 மணிக்கு பாட்டுப் போட்டி, பரதநாட்டிய போட்டி, கிராமிய நடனப் போட்டி நடைபெறும். பாட்டுப் போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம்.