பாலக்கோடு, ஆக.20: மாரண்டஅள்ளி அருகே சாஸ்திரமூட்லு ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி சாஸ்திரமூட்லு கிராமத்தில், சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு சொந்தமான சாஸ்திரமூட்லு ஏரியை, 35 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, போலி பட்டா தயாரித்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்துவிட்டார். இதனால், ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் சேகரமாகும் மழைநீர் தேங்காமல், சின்னாற்றில் கலந்து வீணாகி வருகிறது. எனவே, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியில் தண்ணீர் தேங்கி நிற்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள், கலெக்டர் மலர்விழி, அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 100க்கும் மேற்பட்ட மக்கள், மாரண்டஅள்ளி சாலையில் காலி குடங்களுடன் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.