தர்மபுரி, ஆக.14: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள உள்ள அணைகள் நிரம்பியது. இதையடுது–்து அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியில் 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த மூன்று நாட்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கும் கட்டடத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதாள அறைக்குள் தண்ணீர் புகுந்ததால் மின்மோட்டார்கள் நீரில் மூழ்கின. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தர்மபுரி நகராட்சி மற்றும் இலக்கியம்பட்டி, உங்காரனஅள்ளி, அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமத்துக்கள்ளாகி உள்ளனர். காசு கொடுத்து கேன் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கிராமங்களில் வசிக்கும் மக்கள், ஆழ்துளை கிணற்று தண்ணீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தவிர நீண்ட தூரம் சென்று விவசாய கிணறுகளில்
இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.