கோவை, ஆக.14: தமிழகத்தில் கழிவு நீர் சுத்திகரிக்கும் கிளஸ்டர் திட்டம் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை எதிர்ப்பால் முடங்கியது. தமிழகத்தில் 15 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி, 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் சென்னை, கோவை உட்பட 9 மாநகராட்சி, 27 நகராட்சி, 3 பேரூராட்சிகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. இதர உள்ளாட்சி பகுதிகளில் குறிப்பாக மாநில அளவில் 65 சதவீத பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பு கிடையாது. சில பகுதிகளில் சாக்கடை கால்வாயில் கழிவுகளை திறந்து விடுகின்றனர். வீடுகளில் தனிநபர் கழிவறைகளின் கழிவுகளை ெசப்டிக் டேங்க் வாகனங்களில் அகற்றப்படுகிறது. மக்கள் பாதாள சாக்கடை இணைப்பு பெற ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் உள்ளாட்சிகள் பாதாள சாக்கடை திட்டங்களை நிறைவேற்ற ஆர்வம் காட்டவில்லை. மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாததால் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. நகர், கிராம பகுதிகளில் செப்டிக் டேங்க் கழிவுகள் உள்ளிட்ட கசடுகளை அகற்ற கிளஸ்டர் திட்டம் 3 ஆண்டிற்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 18 முதல் 20 கி.மீ தூர சுற்றளவில் உள்ள உள்ளாட்சிகள் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது. 20 கிலோ மீட்டர் சுற்றளவு எல்லைக்குள் உள்ள வீடு, வணிக கட்டடங்களில் இருந்து வெளியேற்றப்படும் மலக்கழிவு நீர் ஒரே பகுதியில் தொகுக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரித்து வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டது.