பொதுப்பணித்துறை எதிர்ப்பால் கழிவு நீரை சுத்திகரிக்கும் கிளஸ்டர் திட்டம் முடக்கம்

கோவை,  ஆக.14:  தமிழகத்தில் கழிவு நீர் சுத்திகரிக்கும் கிளஸ்டர் திட்டம்  பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை எதிர்ப்பால் முடங்கியது.  தமிழகத்தில்  15 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சி, 12,524 கிராம பஞ்சாயத்துகள்  உள்ளன. இதில் சென்னை, கோவை உட்பட 9 மாநகராட்சி, 27 நகராட்சி, 3  பேரூராட்சிகளில் மட்டும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. இதர உள்ளாட்சி  பகுதிகளில் குறிப்பாக மாநில அளவில் 65 சதவீத பகுதிகளில் பாதாள சாக்கடை  இணைப்பு கிடையாது. சில பகுதிகளில் சாக்கடை கால்வாயில் கழிவுகளை திறந்து  விடுகின்றனர். வீடுகளில் தனிநபர் கழிவறைகளின் கழிவுகளை ெசப்டிக் டேங்க்  வாகனங்களில் அகற்றப்படுகிறது.   மக்கள் பாதாள சாக்கடை  இணைப்பு பெற ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் உள்ளாட்சிகள் பாதாள சாக்கடை  திட்டங்களை நிறைவேற்ற ஆர்வம் காட்டவில்லை. மக்கள் தொகை பெருக்கம்  அதிகரித்து வரும் நிலையில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாததால் சுகாதார சீர்கேடு  அதிகரித்துள்ளது. நகர், கிராம பகுதிகளில் செப்டிக் டேங்க் கழிவுகள்  உள்ளிட்ட கசடுகளை அகற்ற கிளஸ்டர் திட்டம் 3 ஆண்டிற்கு முன்  அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 18 முதல் 20 கி.மீ தூர  சுற்றளவில் உள்ள உள்ளாட்சிகள் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது. 20 கிலோ  மீட்டர் சுற்றளவு எல்லைக்குள் உள்ள வீடு, வணிக கட்டடங்களில் இருந்து  வெளியேற்றப்படும் மலக்கழிவு நீர் ஒரே பகுதியில் தொகுக்கப்பட்டு  சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரித்து வெளியேற்ற முடிவு  எடுக்கப்பட்டது.  

ஊராட்சி பகுதிகளில் 25 முதல் 35 கிராமங்களுக்கு ஒரு  கிளஸ்டர், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 15 முதல் 20 கிராமங்களுக்கு ஒரு  கிளஸ்டர் என ஏற்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது.  மாநில அளவில் 600க்கும்  மேற்பட்ட கிளஸ்டர்கள் உருவாக்கப்பட்டு, கழிவு நீர் சுத்திகரிப்பு  நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் மூலமாக நகராட்சி, பேரூராட்சி,  ஊராட்சி பகுதிகளின் அசுத்தமான கழிவுகள் பொது இடங்கள், தாழ்வான பகுதி,  குளம், குட்டை, தடுப்பணை, ஆறு உள்ளிட்ட நீர் பகுதிகளில் விடுவது  தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் நடைமுறைக்கு  வராமல் முடக்கப்பட்டது.   மாநகராட்சி நிர்வாகத்துடன்,  பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு  இல்லாததால் இந்த திட்டம் முடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கழிவு நீரை  சுத்திகரித்த பின்னர் நீர் தேக்கங்களில் விட, பொதுப்பணித்துறை, ஊரக  வளர்ச்சி முகமை ஒப்பு கொள்ளவில்லை. சாக்கடை, மலக்கழிவு நீரை உள்ளாட்சிகள்  நீர் தேக்கங்களில் விடுவதை நிறுத்த முன் வரவில்லை. இந்நிலையில் கழிவு நீர்  கிளஸ்டர் எந்த பயனும் தராது என பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி முகமை  எதிர்ப்பு காட்டியுள்ளது. கிளஸ்டருக்காக மாநில அளவில் பெரும் தொகை  ஒதுக்கப்பட்டு, பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: