கோவை, ஆக. 14: கோவையில் குறுந்தொழில்களுக்கு தனியாக தொழிற்பேட்டை அமைத்து தரவேண்டும் என குறுந்தொழில் மற்றும் ஊரகத்தொழில் முனைவோர் சங்கமான காட்மா கோரிக்கை விடுத்துள்ளது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழில் முனைவோர் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காட்மா அமைப்பின் தலைவர் ரவிக்குமார், பொதுச்செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் ராசாமணியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழிற்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 90சதவீத குறுந்தொழிற்கூடங்கள் குடியிருப்பு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்கூடங்களால் சுற்றுப்புற சுழலுக்கும், பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும், இடையூறும் ஏற்படுவதில்லை. ஆனால் குறுந்தொழில் முனைவோர் மீதுள்ள தனிப்பட்ட விரோதம் மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக குடியிருப்புவாசிகளில் சிலர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமும், மாநகராட்சியிடமும் பொய்யான புகார்களை கூறி தொழிலை முடக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.