வால்பாறை, ஆக.11: வால்பாறை பகுதியில் மழை பாதித்த பகுதிகளை பொள்ளாச்சி எம்பி.,சண்முகசுந்தரம், கோவை திமுக. தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
வால்பாறையில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை அதிக மழை பெய்து கடந்த மூன்று தினங்களாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். பாதிப்படைந்த 120 பேர் வால்பாறை அரசு கல்லூரியில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வால்பாறை டவுனில் பாதிப்படைந்த வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்து மக்களிடம் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தினர். அப் பகுதியில் உள்ள வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனை நேரில் ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து கோட்ட மேலாளர் ஜோதிமணிகண்டனிடம் கேட்டரிந்தார். மேலும் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார். படிப்படியாக பேருந்து சேவைகள் துவங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், டீசல் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.