தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பாடப்புத்தகங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கோடை விடுமுறையின் போதே, மாவட்டம் வாரியாக நடப்பு ஆண்டுக்கான, பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தந்த பள்ளிகளில் ஒப்படைக்கப்பட்டது. விடுமுறைக்கு பின், பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவ, மாணவியருக்கு இலவச பாட புத்தங்கள் வழங்கப்பட்டது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 3ம் வகுப்பு மற்றும் 4ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு ஆங்கில வழி பாட புத்தகங்கள், பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படாததால், மாணவர்களும், பெற்றோரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஒருசில உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சில பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு உள்ளது. தட்டுப்பாடு உள்ள பாடப்புத்தகம் வந்துவிட்டது. இன்று அல்லது நாளை வினியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.