தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரியில், முதலமைச்சர் இளைஞர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ₹50 ஆயிரம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். நடப்பாண்டிற்கான விருது, எதிர்வரும் வரும் ஆகஸ்டு 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில், முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1.4.2018 அன்று 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் அல்லது 31.3.2019 அன்று 35 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் (2018-19) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.