தர்மபுரி, ஜூன் 11: தர்மபுரி நகரில், சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்து அபாயமும் நிலவுகிறது. தர்மபுரி நகரில் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், அதற்கேற்ப சாலை வசதி இல்லை. இதனால், இருசக்கர வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள், சரக்கு ஆட்டோக்கள், கார்கள் பிரதான சாலைகளை ஆக்கிரமித்தபடி பல இடங்களில் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாகி வருகிறது. தர்மபுரி பஸ் நிலையம், பூங்கா, அரசு மருத்துவமனை உள்ளிட்ட அதிக மக்கள் கூடும் இடங்களில், வழிகளை மறித்து ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, தர்மபுரி நகர கடைவீதிகளில் சாலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.